பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்: ஜனாதிபதியின் மௌனம் ஏன்? – தயாசிறி எம்.பி. பகிரங்கக் கேள்வி.!
கொலம்பு – சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பதற்கு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறியதாவது, “அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எமது நிறுவனச் சட்டக்கோவையின் 27ஆவது பிரிவின்படி, ஓர் அரச அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அவர் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ‘அரச அதிகாரிகள்’ என வரையறுக்கப்படுவார்கள். எனவே, ஜனாதிபதி உடனடியாக குமார ஜயகொடிக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.”
தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டதாவது, “தற்போதைய சபாநாயகருக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 125 மற்றும் 127ஆவது பிரிவுகளின்படி, குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கையில் ஊடக சந்திப்புகளை நடத்துவது சட்டவிரோதம்.
ஆனால் சபாநாயகர் அதனைச் செய்துள்ளார். பல குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவர் சபாநாயகராக செயல்படும்போது எங்களுக்கு நீதி கிடைக்காது.”அவர் இதையும் வலியுறுத்தினார்.”முன்னைய சபாநாயகர் ஒருவர் கல்வித் தகுதி இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டார். ஆனால் இன்றைய சபாநாயகர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் பதவியில் நீடித்து வருகிறார்.
தனது நண்பர் என்பதற்காகக் குமார ஜயகொடிக்கு அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதி, இவ்வருடம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து என்ன செய்யப்போகிறார்? முறைகேடுகளில் தொடர்புடையவர்களை உடனடியாகப் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். எமது அரசின் கீழ் சபாநாயகருக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”