கரையோரப் பகுதிகளில் 50 கி.மீ. தார்வீதிகள் அமைக்க திட்டம் – அபூபக்கர் ஆதம்பாவா.!
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 கிலோமீற்றர் தார்வீதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
கல்முனை – சேனைக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மொத்தமாக 50 கிலோமீற்றர் தார்வீதிகளை அமைப்பதே இலக்காக உள்ளதாகவும், கடந்த மூன்று மாதங்களில் 10 கிலோமீற்றர் வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், எஞ்சியுள்ள 40 கிலோமீற்றர் வீதிகளை அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.இதன்படி அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ். வீதி, சாய்ந்தமருது கல்யாண வீதி, நிந்தவூர் இமாம் றூமி வீதி மற்றும் மருதமுனை பள்ளிவாசல் முன் வீதி ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து துறையில் உள்ள பிற முக்கிய சிக்கல்களையும் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து கிட்டங்கி பாலத்தையும் விரைவில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிர்வாக மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்கள் தன்னார்வமாக வரி செலுத்தும் நிலை உருவாகி வரி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியால் நாடு சேதங்களை சந்தித்தபோதிலும், பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.