ரணிலின் வெளிநாட்டு பயண வழக்கு அரசுக்கே வினையாகும் – உதய கம்மன்பில எச்சரிக்கை.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு, எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கே பாதகமாக முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு ஜனாதிபதியின் பயணங்களை உத்தியோகபூர்வம் மற்றும் தனிப்பட்டது எனத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஒருவர் இருபத்துநான்கு மணிநேரமும் பொறுப்பில் இருக்கும் நிலையால், அவர் மேற்கொள்ளும் பயணங்களைப் பற்றி இவ்வாறு விவாதிப்பது தேவையற்றது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட பயணங்களில் உத்தியோகபூர்வ வாகனங்களையோ பாதுகாப்பையோ பயன்படுத்த முடியாது என வாதிடுவது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அப்படியானால் ஜனாதிபதியின் தனிப்பட்ட பயணங்கள் பாதுகாப்பற்றதாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றது தனிப்பட்ட நிகழ்வு என அரசு தரப்பு கூறினால், பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டதும் தனியார் நிகழ்வாகக் கருதப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பான் மற்றும் அனுராதபுரம் சென்ற பயணங்களும் அரசியல் தொடர்புடையவையே என்றும், அவற்றிலும் உத்தியோகபூர்வ வாகனங்களும் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.ரணில் விக்கிரமசிங்கவை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இந்தச் சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் உதய கம்மன்பில எச்சரித்தார்.