அரசுக்கு தெளிவான வெளியுறவுக் கொள்கை இல்லை – ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு.!
அரசாங்கத்திடம் தற்போது தெளிவான வெளியுறவுக் கொள்கை எதுவும் இல்லை என்றும், நாடு காற்றுக்கும் அலைக்கும் இழுத்துச் செல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இல்லாத வகையில் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை எந்தக் கண்டன அறிக்கையும் வெளியிடாதது கவலைக்குரியது என்றும், இவ்வாறான மௌனம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, பதற்றமான சூழல் காரணமாக கப்பல்கள் இலங்கை துறைமுகங்களைத் தவிர்க்கும் அபாயமும் இருப்பதாக அவர் கூறினார்.
அதேவேளை, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியா–சீனா எல்லை மோதல் காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய அரசிடம் அத்தகைய பொறுப்புணர்வு காணப்படவில்லை என்றும் தெரிவித்தார்.