பொருளாதார நிலைமையை பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்.!
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு நேற்று (13) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூடினது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் உருவான சிக்கல்கள் ஆகியவை இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், நாட்டின் சந்தை நிலைமையை நிலைப்படுத்துதல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும், முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்களும் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.