மன்னாரில் இளைஞர்களுக்கு இஸ்லாமிய வாழ்வியல் பயிற்சி.!
மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழி காட்டும் “எதிர்கால தலைவர்கள்” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “இஸ்லாமிய வாழ்வியல் பயில்வு” எனும் 7 நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (13) மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வு மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில், பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மறைக்கார் பங்கேற்றார்.
மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் என். எம். முனவ்பர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டபலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இந்தப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ரமலான் காலத்தை முன்னிட்டு இளைஞர்களின் இஸ்லாமிய நெறி, சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுமார் 1000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட மையங்களில், 35க்கும் மேற்பட்ட திறமையான பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்புடன் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சி கட்சியின் கல்விப் பிரிவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.