வியாபாரியின் முகத்தில் திரவம் தெளித்து மாணிக்கங்கள் கொள்ளை.!
கண்டியில் உள்ள ஈ.எல். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள மாணிக்கக்கல் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் மற்றும் மாணிக்கங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சுமார் 10.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணிக்கக்கல் வாங்குவதாக கூறி ஒருவர் அந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்தார். பின்னர் அவர் வர்த்தகரின் முகத்தில் திரவமொன்றை தெளித்துவிட்டு, சுமார் 60 இலட்சம் ரூபா மதிப்பிலான மாணிக்கங்கள் அடங்கிய பெட்டியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், அதிர்ச்சிதரும் கொள்ளைச் சம்பவம் கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ளது.