சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்கும் முகமாக நேற்று 12 ஆம் திகதி மதியம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தலா ஒரு குடியிருப்புக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக நேற்று ஆரம்பிக்கப்பட்டு இதற்கான சுத்தமான குடிநீர் கிளன்டில் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை நீர் இறைக்கும் இயந்திரம் ஊடாக குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்து குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் நீர்த் தாங்கி அமைக்கப்பட்டு அந்த நீர்த்தாங்கியில் இருந்து நீரை வழங்கும் திட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த வேலைத்திட்டம் 2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான நீர்க் குழாய்கள் இப் பிரதேசத்திற்கு கொண்டு வந்த போதும் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் இடை நடுவில் இந்த வேலைதிட்டத்தை கைவிட்டது.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் வழங்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.