உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை – சஞ்சீவ தெரிவிப்பு.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பு கொண்டதாக கூறப்படும் சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலை நடத்த வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் உயிரிழந்ததால், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதலாளர்களின் மின்னணு சாதனங்கள் மற்றும்ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சத்திய அறிக்கையில், இந்தத் தாக்குதலின் பிரதான திட்டமிடுபவர் சஹ்ரான் ஹாஷிம் என்பதும், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அவர் வழிநடத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் தொடர்பு பேணி அவர்களின் அனுமதியுடன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சர்வதேச அளவில் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய நிலையில், தாக்குதலுக்குத் தயாரான குழுவிற்கு தேவாலயங்களை சுரேஷ் சலே காட்டினார் என கூறுவது நகைச்சுவையானதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.சுரேஷ் சலே தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு அரசியல் நியாயம் காண்பிக்கவே உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.