அரசு ஊழலை நிறுவனமயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன் குற்றச்சாட்டு.!
தற்போதைய அரசு வரலாற்றில் முதன்முறையாக ஊழலை நிறுவனமயப்படுத்தியுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நிலக்கரி கொள்முதல் மற்றும் 323 கொள்கலன்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தேர்தல் அல்லது அரசியல் கூட்டணி அல்ல என்றும், நாட்டின் பொதுவான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கவே தாமும் வி. இராதாகிருஷ்ணன் எம்.பியும் இந்த மேடையில் கலந்துகொண்டதாக மனோ கணேசன் கூறினார்.
அரசின் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலக்கரி ஊழல் மற்றும் 323 கொள்கலன்கள் தொடர்பான விவகாரங்கள் பாரிய கறையாகப் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த கால ஊழல்களை விடவும் தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரி ஊழல் தொகை பல மடங்கு அதிகம் எனவும், திருடப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கு சென்றது, அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து அரசு விளக்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் 323 கொள்கலன்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். அந்த கொள்கலன்களை வரிசையாக நிறுத்தினால் களனிப் பாலத்தைக் கடந்து வத்தளை வரை நீளமாக இருக்கும் என்றும், அவற்றை சோதனை இன்றி வெளியே அனுமதித்தது யார் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்னும் சரிவரச் செயற்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, அரசின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முதலில் விசாரிக்க வேண்டும் என்றும், அதுவே அவருக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.
அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் போது சமூக ஊடகங்களில் தரக்குறைவான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு தாம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.மற்றவர்களை திருடன் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தங்கள்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு நேர்மையாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.