சட்டத்தரணி தம்பதி கொ*லை; கைதான முன்னாள் கடற்படை சிப்பாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்.!
கொழும்பு, தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருடன் இருந்த இருவர் மொனராகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் தென் மாகாணத்தில் மட்டும் பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை நடத்தி, இதுவரை 11 பேரைக் கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இத்தனை கொலைகளைச் செய்த போதிலும், இதுவரை எந்தவொரு சம்பவத்திற்காகவும் இவர் பொலிஸாரினால் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மூவருக்கு எதிராக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, தற்போது இரண்டாவது துப்பாக்கிதாரியும் சிக்கியுள்ளார்.
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் இந்தப் பாதாள உலகக் கும்பலின் ஏனைய தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.