நெல்லினை வீதிகளில் உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்துக்கு இடையூறு.!
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதால் நெல்லினை பிரதான வீதிகள், உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக விவசாயிகள் தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக இச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.
போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக நெல்லை குவித்து உலரவிடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தனிப்பட்ட சுய இலாபத்திற்காக இவ்வாறான வீதிகளை பயன்படுத்தவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறான சட்ட விரோதமாக வீதிகளில் நெல்லை உலரவிடுபவர்களுக்கு எதிராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.