மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!
மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினரான தயாபரன் தனது வட்டாரம் தவிர்ந்து வேறொரு வட்டாரத்துக்கு சென்று, நவாலி சோமசுந்தரம் வீதியில் உள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு சொந்தமான வாய்க்காலில் இருந்து 25 லோட் மண் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதற்காக பிரதேச சபையின் ஜேசிபி இயந்திரமானது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறொரு திணைக்களத்திற்கு வேலை செய்வதாக இருந்தால் பிரதேச சபையின் நிர்வாக பிரிவில் அனுமதி பெற்றே அந்த வாகனம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது நியதி.
அத்துடன் அந்த மண்ணை ஏற்றிச் செல்வதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் மண் ஏற்றிச் செல்லப்பட்டதாக நவாலி பகுதி பிரதேச சபையின் உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது கடந்த பிரதேச சபை அமர்வில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அங்கு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர் உறுப்பினர் தயாபரன் ஏற்றிச் சென்ற மண்ணை மீண்டும் ஏற்றிய இடத்திற்கே கொண்டு சென்று போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.