வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்க இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது.!
வழக்குத் தீர்ப்பு ஒன்றின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பணத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்று சமரசமாக முடிவடைந்ததையடுத்து, அதன் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காகச் சந்தேகநபரான ஊழியர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி 500 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று புதன்கிழமை (16) மாலை 3.35 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்துச் சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.