புத்தள – கதிர்காமம் வீதியில் காட்டு யானை தாக்குதல் : 10 பேர் காயம்!
புத்தள – கதிர்காமம் வீதியில் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல், சிலாபத்திலிருந்து கதிர்காமம் நோக்கி வந்த வழிபாட்டாளர்கள், கதிர்காம வழிபாட்டை முடித்துக்கொண்டு புத்தள – கதிர்காமம் வீதியூடாக மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ND 9105 என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த பேருந்தில் விபத்து நடந்த வேளையில் சுமார் 60 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் நின்றிருந்த காட்டு யானை திடீரென பேருந்தைத் தாக்கியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பயணிகள் உடனடி சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக காயமடைந்த எவரின் நிலையும் பலத்த காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





