வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அத்தியாவசியம்.!
கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் பற்றிய பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு உபச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அமைச்சர் தனது உரையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களிப்பதற்கான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கும்போது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியே பெருமளவிலான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும், நாட்டுடனான அவர்களின் பிணைப்பு புவியியல் எல்லைகளைத் தாண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் இன்னமும் தங்களது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களின் வாக்களிப்பு உரிமையை உறுதி செய்யும் எதிர்காலச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிற நாடுகளின் அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளதாகவும், சர்வதேச நடைமுறைகளை ஆராய்வதன் மூலம் உலகளாவிய சமூகத்தின் யதார்த்தங்களுக்கு ஏற்ப இலங்கையின் தேர்தல் சட்டக் கட்டமைப்பை மேம்படுத்த இந்த மாநாடு பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.