கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பில் தவிசாளர் கருத்து.!
கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை முறைப்படுத்தியுள்ளன.
எதிர்கொண்ட சவால்கள்
கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மணல் வகைகள் – விலைகள்
கழுவப்படாத மண் களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில் 10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000 ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
கழுவப்பட்ட மண்
1,000-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக் கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும் செய்யப்படவில்லை. அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.
மணல் பெறுவதற்கான நடைமுறை பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற முடியும்.
முன்னுரிமை
இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எச்சரிக்கை
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களில் வலம்வரும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.