வடக்கில் 54 நீர்ப்பாசனக் குளங்களில் 43 குளங்களின் நீர்மட்டம் குறைவு!
வடமாகாணத்தில் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.
அவற்றில் விசுவமடு குளம் உள்ளிட்ட 3 குளங்களில் மாத்திரமே சுமார் 50 சதவீத நீர் காணப்படுவதாகவும், இரணைமடு குளம் உள்ளிட்ட 8 குளங்களில் சுமார் 25 சதவீத நீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய 43 குளங்களிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும், பெரும்பாலான குளங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவான நீரே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாகவும், இதற்கு எல் நினோ தாக்கம் மாத்திரமன்றி, புனரமைப்புப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டமை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை நீர் ஆவியாகின்றமை ஆகியவையும் முக்கிய காரணங்களாகும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காலபோகச் செய்கையை செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், தற்போதைய குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழைவீழ்ச்சி மற்றும் குளங்களின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்த பின்னரே காலபோகச் செய்கைக்கான நீர் விநியோகம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு மேலும் தெரிவித்துள்ளார்.