சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்
பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி மெக்காவில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோரால் இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
உறுப்பு நாடுகளின் தற்காப்புத் திறனை மேம்படுத்துதல், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்தல், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பின் பாதுகாப்புக் கட்டமைப்பை ஒத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.