யாழ். பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான நிரந்தர நியமனத்தில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்ற நிலையில், 71 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நீண்டகாலமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தங்களைப் புறக்கணித்து, புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலத்தை கருத்திற்கொண்டு நியாயமான தீர்வை வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.