புனித மீலாதுன் நபி தினம் இன்று.!
இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘மீலாதுன் நபி’ (ஈத்-ஏ-மீலாத்) புனித தினம் இன்று (26) ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் பக்திச் சிறப்புடன் நினைவுகூரப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் (ஹிஜ்ரி) மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதைக் கொண்டு இந்நாள் தீர்மானிக்கப்படுகிறது.
கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் பிறந்த நபிகளாரின் நினைவாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் நபிகளாரின் மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே இது பார்க்கப்பட்டது. 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், நபிகளாரின் வரலாற்றுப் போதனைகள், இறை வழிபாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளுடன் கூடிய சிறப்பு நாளாக மாறத் தொடங்கியது.
காலப்போக்கில் உலகளாவிய முஸ்லிம்களின் ஆன்மீக நெறிகளைப் புதுப்பிக்கும் முக்கியத்துவமிக்க நாளாக இது உருவெடுத்துள்ளது.
நபிகள் நாயகம் அக்கால அரபுச் சமூகத்தில் நிலவிய பிளவுகளைக் களைந்து சகோதரத்துவம், அமைதி, தியாகம் மற்றும் நற்பண்புகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க 23 ஆண்டுகள் தொடர்ந்து பாடுபட்டார். இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவும் வழியில் அவர் எதிர்கொண்ட கடுமையான துன்பங்களையும் பொறுமையுடனும் மௌனத்துடனும் கடந்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
மீலாதுன் நபி என்பது வெறும் பண்டிகையாக மட்டும் அல்லாமல், நபிகளார் போதித்த அன்பு, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவத்தை வாழ்வில் கடைப்பிடிக்கும் நாளாகக் கருதப்படுகிறது.
இந்நாளில் ஏழை எளியோருக்கு உதவுவது, பசித்தோருக்கு உணவளிப்பது மற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவை முதன்மையான அறச்செயல்களாக முன்னெடுக்கப்படுகின்றன.