வடமராட்சி வடக்கில் புதிய இரண்டு வீடுகள் கையளிப்பு.!
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் வீடமைப்பு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும், தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில இடம்பெற்றது. இதில் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களினால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரன் அவர்களுக்கு குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கியமான ஆதரவாக அமையும் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட J/412 கிராம சேவையாளர் பிரிவிலும் நேற்று சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்விலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான “ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்” அவர்களினால் மகேந்திரராஜா மகேஸ்வரி எனும் பயனாளியிடம் குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


