பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்.!
வருடாந்தம் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது, பனை வளம் பெருகும் வகையிலும் பனை சார் உற்பத்தி பொருட்களின் பலாபலன்களை வெளிப்படுத்தும் வகையிலும் அப்பொருட்களுக்கு உறுதியான சந்தைப்படுத்தலை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் பனம் விதைகள் நடுதல், பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், பனைசார் பொருட்களை உற்பத்தி செய்தல் தொடர்பான போட்டிகள், பாடசாலை மாணவர்களிடையே ஓவியப் போட்டிகள், ‘தாலம்’ சஞ்சிகை வெளியீடு மற்றும் கலை நிகழ்வுகள் என்றவாறு வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் பனை வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இவ்வருடம் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 26 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது “பனை வளம் நிலையான வாழ்வின் பலம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக ஜூலை 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மாவட்ட ரீதியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக ஏற்பாட்டில் பனை வளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.