மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சார பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விசேட கலந் துரையாடலில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள், காற்றாலை மின் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது, சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்பாகவும், மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மன்னார் தீவில் தொடர்ந்து ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.