மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!
பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி நாடகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி நாடகம் என்ற மக்கள் ஊடகத்தின் வழியாக, அடிமட்ட மக்களின் குரலை சமூகத்திற்கும், தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரக்கச் சொல்வதே இந்த ஆற்றுகையின் முதன்மை நோக்கமாக அமைந்திருந்தது.
இந்த வீதி நாடகமானது ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய , கல்லாறு, பதுளை, பசறை மற்றும் எட்டம்பட்டிய உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டது.
குறிப்பாக, டித்வா புயலுக்குப் பிறகும் சொந்த நிலங்களை இழந்த மக்களின் வலியையும், நில உரிமையைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த நாடகம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மாத்திரம் 400 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்நாடகத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
பதுளை, பசறை மற்றும் எட்டம்பட்டிய ஆகிய பிரதேசங்களில், ‘எதிர்காலம் எங்கள் கையில்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்களுக்காக இந்த நாடகங்கள் மிக நேர்த்தியாக மேடையேற்றப்பட்டன.
நாடகம் நிறைவடைந்ததும், பார்வையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், நில உரிமை தொடர்பான சமூக உரையாடலைத் தூண்டும் ஒரு கருவியாக அமைந்தது.
பாடசாலை வளாகங்களில் நாடகம் அரங்கேற்றப்பட்டபோது, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாடகத்தின் அழகியல் அம்சங்கள், கருப்பொருளை எளிமையாக மக்களிடம் கொண்டு செல்லும் விதம் குறித்தும், ஒரு சமூக விழிப்புணர்வு நாடகத்தைத் தயாரிப்பதற்கான நுணுக்கங்கள் குறித்தும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நாவலப்பிட்டிய கல்லாறு பகுதியில் நாடகம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் ஒருவரால் நாடகம் இடைநிறுத்தப்பட்டது.
அவர் அந்நாடகத்தை வெறும் காட்சியாகப் பார்க்காமல், தனது வாழ்வின் ஒரு பகுதியாக உணர்ந்தார்.
பெருந்தோட்டக் கம்பனிகளின் அடக்குமுறைகளைத் தனது வாழ்க்கையில் அனுபவித்த அவருக்கு, நாடகக் காட்சிகள் தனது வலியை மீளக் காட்டுவதாக இருந்தன.
இருப்பினும், அங்கிருந்த மக்களின் ஆதரவோடு நாடகம் தடையின்றித் தொடர்ந்து சிறப்பாக நிறைவுற்றது.
கடந்த 203 ஆண்டுகளாக சொந்த நிலமின்றி வாழ்வோரின் கண்ணீர்க் கதையையும், அவர்களின் வாழ்வியல், அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களையும் இந்நாடகம் கலைத்துவமாகப் படம்பிடித்துக் காட்டியது.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்து உழைத்த மக்களுக்கு, ஒரு அங்குல நிலம் கூடச் சொந்தமில்லாமல் இருப்பது 21 ஆம் நூற்றாண்டில் பெரும் துரதிர்ஷ்டவசமானது என்பதை இந்நாடகம் உலகிற்கு எடுத்துரைத்தது.
இந்நாடக குழுவினர்கள் அவர்களுடைய நாடக ஆற்றுகைக்கு முன்பதாக மலையக மக்களுடைய காணி உரிமை தொடர்பாக அவர்களை தெளிவூட்டும் விதமாக ஒரு துண்டு பிரசுரத்தினை மக்களுக்கு கையளித்தனர்.
அத்துண்டு பிரசுரத்தில் மலையக மக்களுடைய எதிர்கால காணித்திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் அவர்களுடைய அபிலாசைகள் அவருடைய கலை கலாச்சாரங்கள் பாதுகாப்பு அவர்கள் உரிமைகள் அனைத்தும் நிலத்தைச் சார்ந்தவயாக இருக்கின்றது.






