நூதனமுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு – சந்தேக நபர் கைது!
மட்டக்களப்பில் நூதனமாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இணையத்தில் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.
இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.