சீனாவில் பாரிய நிலச்சரிவு.!
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில், பெங்சுய் மாவட்டம் ( Pengshui County ) இல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக சீன அரசின் ஊடகமான CCTV வெளியிட்ட தகவலின்படி, மண் மற்றும் பாறைகள் சரிந்து குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளை சூழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத் தலைவர் ரென் சுஜியாங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 34 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்டார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான மற்றும் கணிக்க முடியாத நில அமைப்பைக் கொண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலைச்சரிவின் விளிம்புகளில் இன்னும் தளர்வான பாறைகள் காணப்படுவதால், மீட்புப் பணிகள் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சீன அரசு 50 மில்லியன் யுவானை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், மீட்புப் பணிகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சீன ஜனாதிபதி, நிலச்சரிவுக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க புவியியல் அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளை முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.