சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பல தீர்க்கமான சாட்சியங்களை முன்னாள் பொலிஸ்மா அதிபர் வழங்கியிருந்தார்.
குறிப்பாக, ‘சாரா ஜாஸ்மின்’ என்பவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமக்குக் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பாரதூரமான விடயங்களை வெளிப்படுத்திய சில நாள்களிலேயே அவர் உயிரிழந்திருக்கின்றமை பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருகின்றது.
கடந்த காலங்களிலும் சாட்சியங்களை வழங்கிய நபர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் இவருடைய மரணத்தையும் ஒரு பாரதூரமான பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் நிழல் அரசின் ஆதிக்கம் இன்னும் தொடர்கின்றது என்பதையும், சாட்சிகளைத் திட்டமிட்டு அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது வலுப்படுத்துகின்றது.
எனவே, இந்த மரணம் குறித்து மிக விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மறுபுறம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் நிறைந்த இரு ஊடக நிறுவனங்கள், இந்த மரணத்தை அவசரமாகத் தற்கொலை எனச் சித்தரிக்க முயற்சித்தன.
அவ்வாறான ஊடகங்களின் இத்தகைய செயற்பாடே, எமது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.” – என்றார்