மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
அன்னாரது பூதவுடல், கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை முதல் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இதுவரையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
நாட்டின் மிக முக்கிய பொறுப்பை வகித்த ஒருவரின் மரணம் என்பதால், இந்த விசாரணை மிக உன்னிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.