முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் முறைப்படி விசாரணைகள் இடம்பெறுகின்றன – அமைச்சர் நளிந்த விளக்கம்!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தை அரசு அலட்சியப்படுத்தவில்லை; முறையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் அச்சப்படத் தேவையில்லை. இச்சம்பவத்தை அரசியலாக்குவது முறையற்றது.
சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சாட்சியாளர்கள் உயிரிழப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர், தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஊடகச் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.