பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிப்பதற்கான நடவடிக்கையை வலி. வடக்கு பிரதேச சபை முன்னெடுக்கும் – சுமந்திரன் உறுதி!
உள்ளூராட்சி சபையின் கட்டட அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தமை குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 176 காணிகள் தொடர்பான வழக்கிலும், அந்த வைத்தியசாலை அமைந்துள்ள காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அது ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி என்ற நிலைப்பாட்டையே அதிகாரிகள் முன்வைக்கின்றனர். அந்தக் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுவீகரிக்கப்பட்ட காணிக்குள் வைத்தியசாலையை அமைப்பதாக அவர்கள் பதிலளிக்கின்றனர்.
எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாயினும், அந்தப் பிராந்தியத்துக்குரிய உள்ளூராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும். ஆனால், இது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானமாகும். இதனை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அவர்கள் அந்த அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறினால், குறித்த கட்டடத்தை இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை மேற்கொள்ளும்.” – என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.