கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!
டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை(26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்தின் போது டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியில் இருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்ததுடன் அதே சமயம் முச்சக்கரவண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியிலிருந்து அம்பாறை பொது மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியை மீறியதால் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த விபத்தை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று டிப்பர் வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
மேலும் முச்சக்கரவண்டி சாரதியான 34 வயதுடைய கிருஷாந் சனக என்பவர் விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் படுகாயமடைந்த அம்பாறை லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த துலஞ்சன இமேஷ் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார். மேலும் நவகம்புர லயன்ஸ் கழகத்தை சேர்ந்த சுதேஷ் மஹின்சாவும் அவரது மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் மருத்துவமனையில் உயிரிழந்தவர் சுதேஷ் மஹின்சாவின் கணவர் துலஞ்சனா இமேஷ் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
குறித்த சாரதியின் கவனக்குறைவான சாரதியத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இவ்விடயம் குறித்து கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் அம்பாறை பிரிவு 2-இன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திசநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி ஜி. உதயகுமார உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



