அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!
கிளிநொச்சி – குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழந்தவருக்குச் சொந்தமான உடைமைகளோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொருட்களோ சம்பவ இடத்தில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம மரணம் குறித்து இன்று (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
நீதவானின் நேரடிப் பார்வையிடல் மற்றும் உத்தரவைத் தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.