யாழில் சுற்றுலாவிகள் மீது பொலிஸார் தாக்குதல்.!
யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்று, அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் தர்க்கப்பட்டு, இரு குழுக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போதையில் இருந்த பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான இருவர் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றமை தொடர்பிலும், பொது இடமொன்றில் மேலாடைகள் அற்ற நிலையில், நிறை போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டமை தொடர்பிலும் பொலிஸ் திணைக்கள ரீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.




