செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் சுப்பிரமணியம் கணேஷ்வரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து, பாண்ட் இசை முழங்க அவர்களை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் தேசியக் கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன. அதன் பின்னர் நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டுப் போட்டியை சம்பிரதாய முறையில் ஆரம்பித்து வைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கல்வி வலயத்தின் முகாமைத்துவ பிரதிக் கல்வி பணிப்பாளர் நடராஜா காண்டீபன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் செல்வராசா இராமச்சந்திரன் ஆகியோர் உட்பட கௌரவ விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.
இவ்விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, இசை மற்றும் அசைவு நிகழ்ச்சிகள், சிறு ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், பழைய மாணவர்களுக்கான விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், அயல் பாடசாலை ஆசிரியர்கள், மதகுருமார்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
