மசகு எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு.!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பின்னர், உலகின் முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
மாற்றுப் பாதைகள் இல்லாத சூழ்நிலையில், ஈராக், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 120 டொலர் வரை உயர்ந்த நிலையில், தற்போது சுமார் 103 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 73 டொலராக இருந்த நிலையில், மார்ச் 14 ஆம் திகதி அது 103 டொலராக உயர்ந்துள்ளது.
இதனால் கடந்த 15 நாள்களில் மசகு எண்ணெய் விலை 40 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து தடைகள் தொடர்ந்தால், வரும் நாட்களிலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.