திரிவச்சகுளத்தில் சட்டவிரோத காடழிப்பு – கடும் நடவடிக்கை கோரி ரவிகரன் வலியுறுத்தல்.!
வவுனியா வடக்கு திரிவச்சகுளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட சம்பவத்தில் மகாவலி அதிகாரசபை ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திரிவச்சகுளம் பகுதியில் உரிய அனுமதிகள் பெறப்படாமல் சுமார் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி எனக் கூறும் இடத்திலேயே இந்த காடழிப்புஇடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், குறித்த பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களுக்கு அருகிலுள்ள அடர்வனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயற்பாட்டிற்கு மகாவலி அதிகாரசபையின் துணை இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டவிரோதமாக காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலைக்குரியது எனத் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி செயல்பட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபை பாரிய தவறை செய்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் நியாயமான முறையில் செயல்பட்டு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.