வாகனம் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது மாணவன் ஒருவன் இன்று வியாழக்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதன்போது, வாகனத்தின் ஹேண்ட்பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து சென்று, பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.