வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டணமின்றி விசா நீடிப்பு.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசா காலத்தைக் கட்டணமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, கடந்த 2026.02.28 ஆம் திகதி முதல் அப்பிராந்தியத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல வெளிநாட்டவர்கள், தமது விசா காலம் முடிவடைவதற்குள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போயுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, 14 நாட்கள் வரை எவ்வித கட்டணமுமின்றி விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படும்.
விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்படாமல் இந்த நிலைமை நீடித்தால், தேவையேற்படின் மேலும் 14 நாட்களுக்கு (மொத்தம் 28 நாட்கள் வரை) கட்டணமின்றி வீசாவை நீடிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்று வழிப்பயணங்களை ஏற்பாடு செய்யும் வரை, அவர்கள் இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கமையவே இந்தக் கட்டணமற்ற விசா நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.