தரமற்ற நிலக்கரி தொடர்பில் முறையான ‘தடயவியல் கணக்காய்வு’அவசியம் – சஜித் பிரேமதாச.!
அரசாங்கம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட பாரிய நிதி இழப்புகளை மின்கட்டண உயர்வின் மூலம் மக்களிடம் சுமத்துவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விசேட நிபுணர் குழுக்களை நியமிக்காமல், முழுமையான தடயவியல் கணக்காய்வு மேற்கொண்டு குறித்த கொடுக்கல் வாங்கல்களை ஆராய வேண்டும் என அவர் இன்று (26) வெளியிட்ட விசேட அறிக்கையில் வலியுறுத்தினார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி குறித்து எதிர்க்கட்சியினர் வெளியிட்ட தகவல்களின் பின்னர், அரசாங்கப் பொறுப்பாளர்கள் அதனை மக்கள் முன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.குறித்த நிலக்கரியின் பயன்பாட்டால் மின் உற்பத்தி நிலையங்களின் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், சாம்பல் வெளியீடு 11–15 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உற்பத்தி திறன் குறைவதால், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க அதிக செலவுடைய எரிபொருள் மின் நிலையங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டுக்கும் மின் நுகர்வோருக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவும் அவர் கூறினார்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறு ஒன்பதாம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் முப்பதாவது பிரிவின்படி, திறமையான மின்உற்பத்தி அடிப்படையிலேயே கட்டணம் விதிக்கப்பட வேண்டும். எனவே, இத்தகைய நஷ்டகரமான மின்உற்பத்தி செலவுகளை மக்கள் மீது சுமத்த அரசாங்கத்திற்கோ அல்லது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கோஅதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
முறைமாற்றம் செய்வதாக வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம், இன்று ஊழல் நிறைந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.இந்த ஊழலால் ஏற்பட்ட நிதியை கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் அமைப்பதற்கோ அல்லது வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ பயன்படுத்தியிருக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
நுரைச்சோலை மின் நிலையத்திற்குஏற்பட்ட சேதம் மற்றும் நிதி இழப்புகளுக்குப் பொறுப்பு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை வகிக்க வேண்டும் எனவும், மின் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க தனது கட்சி எப்போதும் முன்னின்று செயற்படும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.