அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை.!
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நாளை (27) முதல் அப்பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.
இதனைத் தெரிவித்து அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
டித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்திற்குப் பின்னர் 93 நாட்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதி முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது தொடர்ந்து பணியாற்றியதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்பாளர்களாக தாங்கள் செயல்பட்டதாகவும் அவை குறிப்பிடுகின்றன.மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு மற்றும் மீளளிப்பு கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான அர்ப்பணிப்பான சேவைக்கு இணையான தீர்வுகள் தற்போதைய பிரச்சினைகளுக்கு வழங்கப்படாததாலும், அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாததாலும் தான் கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்ததாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.