யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவு.!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வருகிறார்.
தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி துணைவேந்தராகப் பதவியேற்க உள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை அழைத்திருந்தார்.
பின்னர் நடைபெற்றத் தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று பேராசிரியர் வேல்நம்பி முதன்மை நிலையைப் பெற்றிருந்தார்.
மேலும், கடந்த மூன்று தடவைகள் நடைபெற்ற துணைவேந்தர் தேர்தல்களிலும் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான நடைமுறையின்படி, பேரவையின் விசேடக் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று பேரின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு வழியாக ஜனாதிபதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.