கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்
அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.
முன்னதாக போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.
எனினும், தொடர்ச்சியான மழையால் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் இந்த வீதி மற்றும் பால பிரச்சினைக்கு தற்காலிக சீரமைப்புகள் மட்டுமன்றி, நிரந்தரமான பாலம் அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, குறித்த பாலத்திற்கான நிரந்தர தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
இது குறித்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் உடன் கவணம் செலுத்த வேண்டும் எனவும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல அம்பகமு பிரதேச செயலாளர் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் திருமதி துஷாரி தென்னகோன் மத்திய மாகாண ஆளுநர் இது குறித்து கவனம் செலுத்தி அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.