ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளும் இணைந்து செயற்படக்கூடிய புதிய துறைகளைக் கண்டறிவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றுலா மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அண்மைக் காலத்தில் நடைபெற்ற பேச்சுகள் ஏற்படுத்தியுள்ள விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி விலைகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், அது இலங்கையின் பொருளாதாரத்துக்கும் நுகர்வோருக்கும் எந்த வகைகளில் தாக்கங்களைச் செலுத்தும் என்பது குறித்தும் இரு தரப்பினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.
பிராந்தியத்தில் எழுந்துள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சீரான வாழ்வுரிமை தொடர்பாகவும் பல முக்கிய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் கணிசமான அளவிலான இலங்கைச் சமூகம் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்புகளும் இதன்போது பாராட்டப்பட்டன.
இரு நாடுகளுக்கும் அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மற்றும் புதிய ஒத்துழைப்பு வழிகளைக் கண்டறிவதன் அவசியத்தை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.



