22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு!
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்துவார்.
இதனைத் தொடர்ந்து, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமானது எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (வியாழன், வெள்ளி) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஊழல் ஒழிப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.