காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்த மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் ஒன்றுகூடி இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தாம் வீடுகள் மற்றும் நிலங்கள் அற்று நீண்ட காலமாக இடம்பெயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவம் தற்போதும் தங்கியிருப்பதுடன், அங்கு விவசாயக் செயற்பாடுகளிலும் வர்த்தக நிலையங்களை அமைத்தும் தமது சொந்தத் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை மீளப்பெற்று, சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்தனர்.