தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் சேதமடைந்த லைன் அறைகள் தொடர்பான NBRO அறிக்கையை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை அவசரமாக வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகளான லைன் அறைகள் சேதமடைந்துள்ளமை தொடர்பாக, அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன்.
குறித்த லைன் அறைகளின் நிலைமை தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிக்கை வழங்கியுள்ளதாக அங்கு வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில காரணங்கள் மற்றும் அவதானிப்புகளுடன் மஸ்கெலியா லக்கம் தோட்ட பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் உடன்படவில்லை.
குறிப்பாக, குடியிருப்பாளர்களே தங்களது வீடுகளுக்கு வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தியதாகவோ அல்லது குடியிருப்புகளை சட்டவிரோதமாக நீட்டித்ததன் காரணமாகவே சேதம் ஏற்பட்டதாகவோ கூறப்படும் கருத்துகளை அவர்கள் மறுக்கின்றனர்.
பல தலைமுறைகளாக இக்குடும்பங்கள் குறித்த தோட்ட லைன் அறைகளில் வசித்து வருகின்றனர். தாங்கள் வாழ்ந்து வரும் வீடுகளைத் தாங்களே வேண்டுமென்றே சேதப்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லை.
ஆகையால் NBRO அறிக்கையை மீளாய்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
NBRO அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எல்லைச் சுவர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குடியிருப்பாளர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கின்றனர்.
எனவே, அந்த இடத்தில் உண்மையில் எவ்வாறான பாதுகாப்புச் சுவர் அல்லது எல்லைச் சுவர் இருந்தது, அதன் நிலைமை என்ன என்பதையும் நேரடியாக ஆய்வு செய்து உண்மையான நிலைமையை உறுதிப்படுத்துவது அவசியம்.
ஒரு அறிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்தக் குடும்பங்களின் வீட்டு பாதுகாப்பு தொடர்பாக இறுதியான முடிவு எடுக்காமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய, சுயாதீனமான மற்றும் விரிவான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ளுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும் தங்களது கருத்துக்கள், ஆதாரங்கள் மற்றும் உண்மையான நிலைமையை அதிகாரிகளிடம் முன்வைப்பதற்கான முழுமையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் வீட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இது வெறுமனே ஒரு கட்டிடப் பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக தோட்டத் துறையில் உழைத்து வரும் ஏழை தொழிலாளர் குடும்பங்களின் வீட்டு பாதுகாப்பு, வாழ்வுரிமை, கண்ணியம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தொடர்பான முக்கியமான மனிதாபிமானப் பிரச்சினையாகும்.
NBRO அறிக்கையில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் காணப்படும் நிலையில், அந்த காரணத்தினால் எந்தவொரு குடும்பமும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடாது.
அதேபோல், உரிய மாற்று ஏற்பாடுகள் மற்றும் சட்டபூர்வமான தீர்வுகள் இல்லாமல், அவர்கள் நீண்டகாலமாக வசித்து வரும் குடியிருப்புகளில் இருந்து தேவையின்றி வெளியேற்றப்படுவதும் நியாயமானதாக இருக்காது.
முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்:-
லக்கம் தோட்டத்தில் சேதமடைந்த அனைத்து லைன் அறைகளையும் மீண்டும் விரிவான தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
NBRO அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் மற்றும் காரணங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் கருத்துக்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அதிகாரிகளால் முறையாகப் பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில் சேதமடைந்த லைன் அறைகள் அரசாங்கத்தின் மேற்பார்வையில் முறையாகப் புனரமைக்கப்படவோ அல்லது மீளக் கட்டப்படவோ வேண்டும்.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்குத் தேவையான சீமெந்து பாதுகாப்புச் சுவர்கள், வடிகால் வசதிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
இக்குடும்பங்களை தேவையின்றி லக்கம் தோட்டத்திலிருந்து வெளியேற்றாமல், அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் இடத்திலேயே பாதுகாப்பான வீட்டு வசதியை வழங்குவதற்கான அனைத்து சட்டபூர்வமான வழிகளும் ஆராயப்பட வேண்டும்.
தோட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மாண்புமிகு அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தை அவசரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், தங்களது அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரம், சமூக நீதி மற்றும் மனித கண்ணியத்தை முன்னிலைப்படுத்தி செயல்படும் என நாம் நம்புகிறோம்.
அந்த அடிப்படையில், லக்கம் தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினையையும் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு தொழில்நுட்ப அறிக்கையில் உள்ள சர்ச்சைக்குரிய முடிவுகளின் காரணமாக எந்தவொரு குடும்பமும் பாதுகாப்பான வீடின்றி விடப்படக்கூடாது.
எனவே, தாங்கள் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, உண்மையான நிலைமையை மீண்டும் ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான, சட்டபூர்வமான மற்றும் மனிதாபிமானமான தீர்வை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தங்களது அவசரமான தலையீடும் கருணையுடனான நடவடிக்கையும் மஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும்.