அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மக்கள் பதில் அளிப்பார்கள்.!
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டம்பர் 12 ஆம் திகதி அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (2026.09.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறினார்.
அரசாங்கத்தின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சியினரை அடக்குமுறைகள் மூலம் சிறையில் அடைக்கும் செயற்பாடுகளையும் கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஒன்றுதிரள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சிறைபிடிக்கப்பட்டதன் மூலமும், அனுராதபுரம் விளையாட்டு மைதானத்தை வழங்க மறுத்ததன் மூலமும் இக்கூட்டத்தை சீர்குலைக்க அரசாங்கம் முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இத்தகைய அடக்குமுறைகளால் மக்களின் வருகை இருமடங்காக அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டின் சுகாதாரத் துறை சீர்கேடு அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ‘கீமோதெரபி’ (Chemotherapy) சிகிச்சைகளுக்கான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் தரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.
எனவே, அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளுக்கு இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை என்றும், இந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் உண்மையான எதிர்ப்பு செப்டம்பர் 12 அன்று அமையவுள்ள பேரணியில் வெளிப்படும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள மேலும் தெரிவித்தார்.