இந்தியா – இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான L-70 துப்பாக்கி கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இதில் ஒன்றாகும்.
இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கான மற்றொரு ஒப்பந்தமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
அத்துடன், இலங்கை தேசிய மாணவர் படையணி மற்றும் இந்திய தேசிய மாணவர் படையணிக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தமும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.