நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.